April 26, 2022 1:26 am

50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூடை சீமெந்தின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பு இன்று (26) முதல் அமுலுக்கு வருவதாக இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு மூடை சீமெந்தின் புதிய விலை 2,850 ரூபாவாகும். அத்துடன் உள்நாட்டு சீமெந்து ஒரு மூடை 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சீமெந்து நிறுவனங்களினால் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டது.

இதேவேளை, சீமெந்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளமையினால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு சீமெந்தினை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கம் கோரியுள்ளது. மணலின் விலையும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குறிப்பிட்டார்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீமெந்தின் விலை அதிகரிக்கப்படுவதாக குறித்த நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. எனினும் கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும் சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டது.

ஆயிரத்து 375 ரூபாவுக்கு காணப்பட்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை தற்போது பாரியளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குறிப்பிட்டார்.

Share Button