March 26, 2022 2:03 am

15 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று(26) ஆரம்பமாகிறது.

குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகமாகியுள்ள நிலையில் இம்முறை தொடரில் பங்கேற்கும் அணிகள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிக தடவை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏபிரிவில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ், லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ப பிரிவில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும்.

அதாவது ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடவுள்ளன.58 நாட்கள் லீக் போட்டிகள் நடைபெறும். இதில் 12 நாட்களில் மாத்திரம், தலா 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஏனைய தினங்களில் ஒரே ஒரு போட்டி மாத்திரம் நடைபெறும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னரான பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ள முதல் போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. 2008 ஆம் ஆண்டில் ஆரம்பான ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் இந்த விறுவிறுப்பான தொடர் வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்றது.இன்றைய தினம் ஆரம்பமாகும் 15 ஆவது ஐபிஎல் தொடர் எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share Button