July 10, 2021 4:43 am

ஹொரண – மில்லேவ பகுதிக்கு மாற்றப்படும் சிறைச்சாலை.!

பொரளையில் உள்ள சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை மீளமைக்க முன்மொழியப்பட்டுள்ள ஹொரண – மில்லேவ தோட்டத்துக்கு சொந்தமான காணியை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டார்.

சிதைவடைந்த பழைய கட்டிடங்கள், அதிக நெரிசல் உட்பட வேறு வெளிப்புறக் காரணிகளால், குறித்த சிறைச்சாலையை வேறு ஓர் இடத்துக்கு மாற்றவேண்டிய தேவை, நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், புதிய சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக, நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ஹொரண – மில்லேவ தோட்டத்திலுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை, கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலை, புதிய மகசின் சிறைச்சாலை, சிறைச்சாலை வைத்தியசாலை, பயிற்சிப் பாடசாலை, சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு மற்றும் சமுதாய சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவை, இந்த உத்தேச வளாகத்துக்குள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

சிறைச்சாலைக் கட்டிடத்தொகுதி, சிறைச்சாலை வைத்தியசாலை, பயிற்சிப் பாடசாலை மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களை, ஜனாதிபதி பார்வையிட்டார்.

இதன்போது, அந்தத் தோட்டத்தில் வசிப்பவர்களைச் சந்தித்து, அவர்களது விவரங்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, நிர்மாணப் பணிகள் காரணமாக அவர்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீட்டையும், வீடுகளையும் பெற்றுக்கொடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Share Button