April 25, 2022 2:34 am

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

லக்னௌ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவின்டன் டி காக், தலைவர் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் டி காக் 10 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மனீஷ் பாண்டே சிறிதுநேரம் நிலைத்து ஆடினார். இருப்பினும் அவர் 22 ஓட்டங்களில் வெளியேறினார்.

எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 61 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். நடப்பு சீசனில் ராகுல் அடிக்கும் 2ஆவது சதம் இதுவாகும். லக்னௌ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது.

ராகுல் 103 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து 169 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷனும் ரோகித் சர்மாவும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். இந்த ஜோடி 49 ஓட்டங்களைக் எடுத்திருந்தபோது இஷான் கிஷன் முதலாவதாக அவுட் ஆனார். பின் அடுத்து இறங்கிய டிவால்ட் பிரெவிஸ் பெவிலியன் திரும்ப அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் 39 ஆட்டமிழந்தார்.

நன்றாக ஆடி வந்த திலக் வர்மா மற்றும் பொல்லார்ட் இணை ஆட்டத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16 வது ஓவரில் திலக் வர்மா 38 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

பின்னர், லக்னௌ அணியின் தேர்ந்த பந்துவீச்சால் 20 முடிவில் 8 விக்கெட்களை இழந்த மும்பை அணி 132 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னௌவிடம் தோல்வியைத் தழுவியது.

லக்னௌ பந்துவீச்சாளர் குர்னால் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Share Button