July 7, 2021 9:31 am

பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணைக்கு அமைவாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 2020.06.08 அன்று, கொழும்பிலிருந்து வந்த குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட பிரசாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக பிணை கோரிய வழக்கு நேற்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சியங்களை அச்சுறுத்தியதாக ஆறு மாதங்களுக்கு பின்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பிணை வழங்கவேண்டும் எனவும் பிரசாந்தன் சார்பில் ஆஜரான சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட கூற்றினை ஆராய்ந்த இருவர் அடங்கிய கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரசாந்தனுக்கு பிணை வழங்க அனுமதியளித்தது.

இதனடிப்படையில் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து 25 ஆயிரம் ரூபா காசு பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் பிரசாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரசாந்தன் கொவிட் தொற்று காரணமாக நீதிமன்றம் அழைத்து வரப்படாத நிலையில் சூம் தொழிநுட்பம் ஊடாக விடுவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து வெளி வந்த பிரசாந்தனை கட்சி ஆதரவாளர்கள் ஆரவாரங்களுடன் வரவேற்பு அளித்தனர்.

இலங்கையின் நீதித்துறை சிறந்த முறையில் செயற்படுவதாகவும் நீதித்துறையின் அடிப்படையிலேயே தான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது கருத்து தெரிவித்த பிரசாந்தன் தெரிவித்தார்.

Share Button