புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உடையார்கட்டு வடக்கில் சுதந்திரபுரம் பகுதியில் படையினர் சுற்றிவளைப்பு
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உடையார்கட்டு வடக்கில் சுதந்திரபுரம் பகுதியில் இன்று காலை படையினர் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தியதில் சுமார் 40 இற்கும் அதிகமானோர் அந்தப் பகுதியில் உள்ள முன்பள்ளிக் கட்டடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன என்று அங்கிருந்து வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களின் நிலைமை அறியாது குடும்பத்தவர்கள் பெரும் அச்சத்தில் காத்திருக்கின்றனர். இவ்வாறு குறித்த முன்பள்ளிக் கட்டடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோரின் கைபேசிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் இதனால் அவர்களது நிலை குறித்து அறிய முடியாது உள்ளது எனவும் உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.