April 26, 2022 2:08 am

புச்சா நகரில் உக்ரைன் பெண்களை ரஷ்ய வீரர்கள் தகாத முறையில் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷ்ய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு தற்போது பிரேதபரிசோதனை நடந்து வருகிறது.

இதில் ரஷ்ய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது. அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக தகாத முறையில் செயல்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள், ரஷ்ய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share Button