April 22, 2022 1:37 am

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவின்போது குளிர்சாதனப்பெட்டிக்குள் தஞ்சமடைந்த சிறுவன் இருபது மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது 11 வயது சிறுவன் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் ஒளிந்துகொண்டார். பின்னர் அப்பகுதியில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மீட்பு படையினர் இருபது மணி நேரத்திற்கு மேலாக போராடி குளிர்சாதனப்பெட்டிக்குள் தஞ்சமடைந்த சிறுவனை உயிருடன் மீட்டனர்.

வெளியே வந்த உடன் பசிப்பதாக கூறிய சிறுவனுக்கு உணவு வழங்கியும், காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.       

Share Button