July 10, 2021 10:52 am

நிறைவடைந்தது மாநாடு படப்பிடிப்பு.!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கடந்த பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கல்யாணி ‘மாநாடு’ திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் மாநாடு திரைப்படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடி இருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றுடன் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மாநாடு திரைப்படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. அரசியல் மாநாடு ஒன்றில் நடக்கும் அதிரடியான திருப்பங்கள் கொண்ட நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படத்தில் போஸ்ட் புரோடெக்ஷன் பணிகளை விரைவில் முடித்துவிட்டு, படத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Share Button