July 21, 2021 4:48 am

தீபக் சாஹர் தோனியின் தத்துவத்தின்படி விளையாடியதாகப் பாகிஸ்தான் வீரர் பேசியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற நிலையில், நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 275/9 ரன்கள் சேர்த்தது. அவிக்ஷா பெர்ணான்டோ (50), அசலங்கா 65 (68) ஆகியோர் அரை சதம் கடந்து அசத்தினார்கள்.

இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் முதல் வரிசை வீரர்கள் பிரித்வி ஷா (13), ஷிகர் தவன் (29), இஷான் கிஷன் (1) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. மனிஷ் பாண்டே (37), சூர்யகுமார் யாதவ் (53), க்ருனால் பாண்டியா (35) ஆகியோர் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடி ஆட்டமிழந்தார்கள். இறுதியில், 84 பந்துகளில் 82 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் பார்ட்னர்ஷிப் அமைத்த டெய்ல் என்டர்ஸ் தீபக் சாஹர் (69*), புவனேஷ்வர் குமார் (19*) இருவரும் சிறப்பாக விளையாடி, அணிக்கு 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

இப்போட்டியில் தீபக் சாஹர் கடைசிவரை பொறுமையாக விளையாடி 69 ரன்கள் அடித்தது குறித்து பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா புகழ்ந்து பேசியுள்ளார்.

 “இந்திய அணி வெற்றிபெற்றதற்கு தீபக் சாஹர் மட்டுமே முழுக்காரணம். எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை, தீபக் சாஹரை பார்த்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அடிக்கடி ஸ்ட்ரைக்கே ரொட்டேட் செய்து, அவ்வப்போது பவுண்டரிகள் அடித்துச் சிறப்பாக விளையாடினார். புவனேஷ்வர் குமாரும் இவருடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். பார்ப்பதற்கே அற்புதமாக இருந்தது” எனக் கூறினார்.

மேலும் பேசிய கனேரியா, “தீபக் சாஹர் தேவையில்லாமல் ஷாட்களை ஆடவில்லை. தோனியின் தத்துவத்தின்படி, போட்டியைக் கடைசிவரை எடுத்துச் சென்று, இந்தியாவுக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்” எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share Button