April 25, 2022 2:54 am

சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை கொண்டாடவும், ஊக்குவிக்கவும் ஒரு மாத திருவிழாவுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் சீன மொழி, மலாய், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. பள்ளிகளில் தாய்மொழிப் பாடம் என இந்த மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பார்லிமென்டிலும் பயன்பாட்டில் உள்ளது. அந்நாட்டு ரூபாய் நோட்டுகளிலும் இந்த நான்கு மொழிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிக்கவும், மொழியை ஊக்குவிக்கும் விதமாகவும், ஒரு மாத தமிழ் மொழி திருவிழாவுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஒரு மாத காலமும், தமிழின் தொன்மையை பறைசாற்றும் நாடகங்கள், இசை மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும், ‘ஒன்லைன்’ வாயிலாக நடத்தப்படுகின்றன.

இது குறித்து, சிங்கப்பூர் அரசின் தமிழ் மொழி கவுன்சில் தலைவர் மனோகரன் கூறியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் தாய்மொழி தமிழை கொண்டாடவும், தங்கள் தினசரி வாழ்க்கையில் தமிழ் மொழி பேசுவதை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்த திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இதுபோன்ற விழாக்களில் பங்கேற்கும் போது தலைமுறைகளை தாண்டி தமிழ் மொழி வாழும். இவ்வாறு அவர் கூறினார்.

Share Button