August 21, 2020 11:47 am

அவசர கால உத்தரவுகளை நீடிக்க ஒன்றாரியோ அரசாங்கம் தீர்மானித்துள்ளது

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் குறைந்துள்ள போதும், அவசர கால உத்தரவுகளை நீடிக்க ஒன்றாரியோ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தாலும், கொவிட்-19 தொற்றுநோயை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஒன்றாரியோவுக்கு இன்னும் தேவை என சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்தார்.

அத்துடன், கொவிட்-19 தொற்றுக்கெதிரான எங்கள் போராட்டத்தில் நாங்கள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ள போதும், பாதுகாப்பைக் குறைக்க நேரம் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த தொற்றுநோயின் தற்போதைய விளைவுகளை சமாளிக்கும் போது நாங்கள் பாதுகாப்பாகவும் படிப்படியாகவும் மீட்புப் பாதையில் செல்ல வேண்டும்.

உத்தரவுகள் இன்னும் அவசியமா என்பதைத் தீர்மானிக்க மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமா அல்லது அவ்வாறு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும்போது உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டுமா என நாங்கள் தொடர்ந்து அனைத்து உத்தரவுகளையும் மதிப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்கிறோம்.

மீதமுள்ள எந்த அவசர உத்தரவுகள் அவசியம் என்பதை தீர்மானிக்க தொடர்ந்து மதிப்புரைகள் உள்ளன. அவசர உத்தரவுகளை ஒரே நேரத்தில் 30 நாட்கள் வரை நீட்டிக்க முடியும்’ என கூறினார்.

Share Button