July 1, 2021 4:41 am

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களுக்கு விதிக்கப்படும் மறு சீராமைக்கப்பட்ட வரி கொள்கை இன்று (01) முதல் அமுல்படுத்தப்படுகின்றது.

இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 26 நாடுகளுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் தவிர ஏனைய தபால் பொருட்களுக்கு இன்று முதல் தபால் வரி கொள்கை அமுலாவதாக தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளமைக்கு அமைய தபால் நுகர்வோர், இணையவழி விற்பனையில் ஈடுப்படுவோர் மற்றும் இணையவழி மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு இந்த புதிய வரிகொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 150 யூரோவுக்கும் குறைந்த பெறுமதியுடைய அனைத்து தபால் பொருட்களையும் குறித்த நாடுகளுக்கு அனுப்புவோரிடம் இருந்து நேரடி வரி அறவிடப்படும் என தபால்மா அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அதேபோல் 150 யூரோவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்களை அனுப்பினால் நாட்டில் கடைப்பிடிக்கப்படும் வரி கொள்கைக்கு மேலதிகமாக ஏனைய சுங்கக் கொள்கைகளுக்கு உட்பட்டதாக வரி அறவிடப்படும் எனவும் அந்த வரி பணம் பொருட்களை பெறுவோரிடம் இருந்து அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், வெட் மற்றும் நடவடிக்கை கட்டணங்கள் செலுத்தப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நாட்டின் தபால் நிர்வாகம் அல்லது சுங்கத்தால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் நுகர்வோர் பொறுப்பேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மேற்குறித்த வரி மற்றும் ஏனைய வரிகளுக்கு இலங்கை தபால் திணைக்களம் பொறுப்பேற்காது என தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Share Button