July 19, 2021 10:14 am

உளவு பார்க்கவில்லை எனக் கூறிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் மொபைல் போனையே

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம், இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 40 பேரின் மொபைல் போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பெகாசஸ் விவகாரம் குறித்து, மக்களவையில் விளக்கமளித்த ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சட்ட விரோதமாக ஒருவரின் போனை கண்காணிப்பது என்பது, இந்தியாவில் சாத்தியமற்ற ஒன்று என்றும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்தச் செய்தி வெளியாகி இருப்பது தற்செயலானது அல்ல என்றும், குறிப்பிட்ட நபர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இதில் துளியும் உண்மையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே பெகாசஸ் மென் பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட பிரபலங்களின் அடுத்த பட்டியல் வெளியிட்டது. அதில், யாரையும் உளவு பார்க்கவில்லை என, நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் பெயரும் இருந்தது.

மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் மொபைல் போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share Button