August 7, 2021 10:01 am

நொறுக்குத்தீனி நிறைய சாப்பிடறீங்களா?..

இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஜங்க் புட் உணவுக்கு அடிமையாகியுள்ளனர். ஜங்க் புட் எதிலும் இயற்கையாக கிடைக்கும் உணவுகளின் சுவையை எதிர்பார்க்க முடியாது. ஜங்க் புட் உணவுகளில் உள்ள சுவை அனைத்துமே செயற்கையாக சேர்க்கப்படுபவை தான். இதில் கலந்திருக்கும் மோனோசோடியம் குளூட்டோ மைட், போன்றவை நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிட சொல்லி தூண்டும் வகையில் இருக்கும். அதனால் தான் ஜங்க் புட் சாப்பிடுவோர், பின்பு அதனை மீண்டும் மீண்டும் சாப்பிட ஏங்குகின்றனர்.

கவனத்துடன் சாப்பிடுவது என்பது உணவுடன் தொடர்புடைய ஒரு வகை தியானம் ஆகும். இந்தப் பழக்கத்தை நாம் பழக்கிக் கொள்வதால், பசியை உடலுக்கு உணர்த்துகிறது. இதன் மூலம் உண்மையான பசி அல்லது உணவின் மேல் வரும் ஆசையை வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. கவனத்துடன் சாப்பிடுவது என்பது என்னவென்றால் டிவி மற்றும் ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டோ அல்லது பார்த்துக் கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், சாப்பிடும் செயல்பாட்டில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

நம்மில் பெரும்பாலோர் பசியுடன் இருக்கும் போது, குப்பை உணவுகளான ஜங்க் புட்டை சாப்பிட ஆசைப்படுகிறோம். இதனைத் தவிர்க்க, ஆரோக்கியமான சிற்றுண்டியை நாள் முழுவதும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரண்டு வேளை உணவுக்கு இடையில் ஒரு கைப்பிடியளவு நட்ஸ் வகைகளை சாப்பிடுங்கள். மேலும், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஆரோக்கியமான ஸ்மூத்தீஸ்களை அருந்துங்கள்.

நம் உடல் அடிக்கடி தாகத்தை, நம் பசியுடன் போட்டு குழப்புகிறது. உங்களுக்கு திடீரென பசி ஏற்பட்டால், ஒரு பெரிய கிளாஸ் தண்ணீரைக் குடித்து விட்டு, சிறிது நேரம் காத்திருங்கள். நேரம் கடந்தால் உங்களின் பசி ஏக்கம் மறைந்து போவதை நீங்கள் கவனிக்கலாம். உணவுக்கு இடையில் தண்ணீர் குடிப்பது பசியைக் குறைக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி, உடல் எடை இழப்புக்கும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது உதவும்.

ஒவ்வொரு உணவிலும் போதுமான புரதத்தை சேர்ப்பது, உங்களை அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க வைக்கும் ஒரு சிறந்த வழியாகும். ஏனென்றால், புரதமானது பசியைக் குறைக்க உதவுவதோடு, உங்களை நீண்ட நேரத்துக்கு முழுமையாக உணர வைக்கும். இதுகுறித்த ஒரு ஆய்வில், புரத உட்கொள்ளலை அதிகரிப்பது, ஜங்க் புட் பசியை கணிசமாகக் குறைவது கண்டறியப்பட்டுள்ளது

Share Button